தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் – அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு
விழுப்புரம், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் கடந்த ஆட்சியில் புதிதாக பிரிக்கப்பட்டது. இந்த 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், வருகிற செப்டம்பர் 15ம் தேதிக்குள் விடுபட்ட மாவட்டங்களில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்க சாத்திய கூறுகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் கே.என்.நேரு, அப்போது அவர் கூறியதாவது -
தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். செப்டம்பர் 15க்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம் மகளிர் இட ஒதுக்கீடு போன்றவற்றில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குற்றச்சாட்டுகளை சரிசெய்த பிறகு, இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். வாக்காளர் பட்டியல் சரிசெய்யப்படும். பணிகளும் விரைவுபடுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
