கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி! மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இறந்த பத்திரிகையாளர்களுக்கு இழப்பீடு தொகையாக ரூ. 10 லட்சமும், பத்திரிக்கையாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.5,000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள ஆணையில் கூறப்பட்டுள்ளதாவது -
கொரனோ நோய் தொற்று காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கிடையே ஊடகவியலாளர்கள், பயனுள்ள தகவல்களையும் செய்திகளையும் மக்களுக்கு சரியாக கொண்டு சேர்ப்பதிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றி வருகிறார்கள்.
மக்களுக்கும் அரசுக்கும் ஒரு இணைப்பு பாலமாக இக்காலகட்டத்தில் சிறப்பாக இயங்கி வரும் இவரது பணியை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் காலமுறை இதழ்களில் பணிபுரியும் செய்தியாளர்கள் புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் ஆகியோருக்கு சிறப்பு ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
கடந்த ஆட்சியின்போது ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை 3 ஆயிரம் ரூபாய் ஆகும் .
இதனை தற்போது உயர்த்தி வழங்கக் கோரி பெறப்பட்ட கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த மாண்புமிகு முதலமைச்சர் ஊடகவியலாளர்களுக்கான ஊக்கத் தொகையினை ரூபாய் 3 ரூபாய் 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் கடந்த ஆட்சியின்போது பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணிபுரியும் அரசு அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் கொரோனா தொற்றால் இறக்க நேரிட்டால் அவர்களது வாரிசுதாரர்களுக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டு இருந்தது.
இதனையும் உயர்த்தி வழங்கக் கோரி ஊடகவியலாளர்கள் சார்பாக அளிக்கப்பட்ட கோரிக்கையை பரிவுடன் பரிசீலித்து அதனை ரூபாய் 10 லட்சமாக உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.