ஷோரூமில் விவசாயிக்கு நேர்ந்த துயரம் - அதிரடியாக களத்தில் இறங்கிய ஆனந்த் மஹிந்திரா - குவியும் பாராட்டு

news twitter Anand Mahindra
By Nandhini Jan 26, 2022 10:25 AM GMT
Report

தன்னுடைய ஷோரூமில் விவசாயிக்கு நேர்ந்த சம்பவம் குறித்து, ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்துள்ளார்.

கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கெம்பேகவுடா. இவர் விவசாயி. சமீபத்தில் இவர் தும்கூர் பகுதியிலுள்ள மஹிந்திரா ஷோரூம் ஒன்றுக்கு சென்றார். அப்போது, விவசாயி கெம்பேகவுடா சற்று சாதாரண உடை அணிந்து அந்த ஷோரூமிற்கு சென்றுள்ளார்.

இவர் உண்மையாக நான் கார் வாங்க வந்தேன் என்று கூறியபிறகும், அங்கிருந்த ஊழியர்கள் இவரை நம்பாமல் மீண்டும் மீண்டும் கிண்டல் அடித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயி, அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், 10 லட்ச ரூபாய் தயார் செய்வதாக சவால் விடுத்துச் சென்றார்.

இதனையடுத்து, அடுத்த ஒரு மணி நேரத்துக்குள், கெம்பேகவுடாவின் நண்பர் பணத்தைக் கொண்டு வந்து தரவே, அங்கிருந்த ஊழியர்கள் திகைத்து போனார்கள்.

பணத்தைக் கொடுத்த கெம்பேகவுடா, 'நீங்கள் கேட்டது போலவே பணத்தைக் கொடுத்து விட்டேன், நீங்கள் நான் கேட்ட வண்டியைக் கொடுங்கள்' என்று கூறினார். ஆனால், ஊழியர்கள் 2 நாளுக்கு பிறகு தான் வாகனம் டெலிவரி செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

இதனால், கெம்பேகவுடா மஹிந்திரா ஷோரூம் முன்பு போராட்டம் நடத்தினார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

இரு தரப்புக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பின்னர், கெம்பேகவுடாவிடம் நடந்து கொண்ட செயலுக்கு ஊழியர்கள் மன்னிப்பு கேட்டனர். இச்சம்பவம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், தன்னுடைய ஷோரூமில் நடந்த செயல் குறித்து, ஆனந்த் மஹிந்திரா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், அனைத்து தரப்பினரையும் முன்னோக்கி நகர்த்த வேண்டும் என்பது தான் மஹிந்திரா நிறுவனத்தின் நோக்கம். தனிநபர் கண்ணியத்தைக் காப்பதும் எங்களின் முக்கிய கொள்கை.

இதில், ஏதேனும் சிறு தவறு ஏற்பட்டால் கூட, அதனை சரி செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என குறிப்பிட்டுள்ளார்.

இவரின் டுவிட்டருக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.