“குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்” – தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்திருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
கோவையைச் சேர்ந்த 12ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர், சின்மயா பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைப்பட எழுதியிருந்த கடிதத்தில், சில பெயர்களை குறிப்பிட்டு இவர்கள் யாரையும் சும்மாவிடக்கூடாது என்று சுட்டிக் காட்டியிருப்பது மிகுந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளது. பாலியல் தொல்லை தொடர்பாக அந்த மாணவி தனது பெற்றோரிடம் ஏற்கனவே சொல்லி அழுதிருக்கிறாள். இது குறித்து, பள்ளி நிர்வாகத்தில் பெற்றோர் புகார் அளித்தபோது ஆசிரியரின் மீது பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், அவர் வேறு பள்ளிக்கு மாறியுள்ளார். எனினும், ஆசிரியரின் பாலியல் தொல்லை தொடர்ந்ததால் மனமுடைந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது பெற்றோர், மாணவர்கள், பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். மாணவி தற்கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து, மாணவியின் தற்கொலைக்கு காரணமான மிதுன் சக்கரவர்த்தியை கோவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போலீசார் அவரின் உடலை பரிசோதனை செய்து, நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கோவை சின்மயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ வழக்கும் பதியப்பட்டுள்ளது.
மேலும், அவரை கைது செய்ய 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.
கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!
— M.K.Stalin (@mkstalin) November 13, 2021