சென்னை வானிலை ஆய்வு மைய ‘ரேடார் பழுது’ : சரி செய்வதில் அலட்சியம் – சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் செயல்படாமல் இருப்பதாக மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஒன்றிய அமைச்சர் அமைச்சர் ஜிதேந்தர் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது -
"கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு மழை அதிகமாக கிடைப்பது வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் என எல்லோரும் அறிந்ததே. குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக புயல்களின் தன்மை, மழையை அவதானிப்பது என எல்லாமும் காலநிலை மாற்றத்தால் கடினமாகி வருகிறது.
எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு நாம் தயாராக இருப்பது பேரிடர் காலங்களில் அறிவுப்பூர்மானது. கனமழை குறித்த முன்னறிவிப்புகளை மேற்கொள்ள உதவும் சென்னை துறைமுகம் அருகேயுள்ள உள்ள Doppler Weather Radar 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து பலமுறை பழுதாகியுள்ள இந்த ரேடார் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையிலும் கூட வேலை செய்யாமல் உள்ளது.
இதனை சரி செய்வதில் கூட அலட்சியம் ; இப்போதுதான் உதிரி பாகங்களுக்கான பணி ஆணை கொடுக்கப்பட்டுள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது. இதில் ஒன்றிய அமைச்சர் தலையிட்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு ரேடார் செயல்படுவதை உறுதிபடுத்த கோருகிறேன்.
பருவமழை தீவிரமடைந்துள்ள இந்த சூழலில் உடனடியாக புதிய ரேடார் ஒன்றை சென்னையில் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதைய செயலாளர் கடந்த ஆண்டே புதிய ரேடார் சென்னையில் பொறுத்தப்படும் எனக் கூறியிருந்தார். ஆனால், தற்போது வரை புதிய ரேடார் அமைக்கப்படவில்லை. இது 8 கோடி தமிழ்மக்களின் வாழ்வியலோடு சம்மந்தப்பட்டது என்பதை நினைவில் கொண்டு செயலாற்ற வேண்டும்".
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை வானிலை மையத்திற்கு சொந்தமான ரேடார் பழுதடைந்துள்ளதை சரி செய்வதில் கூட அலட்சியம்; இப்போதுதான் உதிரி பாகங்களுக்கான பணி ஆணை கொடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) November 8, 2021
இதில் ஒன்றிய அமைச்சர் @jitendrasingh உடனடி தலையீடு தேவை.
இது 8 கோடி தமிழ்மக்களின் வாழ்வோடு சம்மந்தப்பட்டது. pic.twitter.com/vAXdGVzEYT