இலங்கை தமிழர்களுக்கு வீடுகள்: இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்

tamilnadu-samugam
By Nandhini Nov 02, 2021 04:30 AM GMT
Report

3,510 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு வீடு கட்டும் திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

இலங்கை அகதிகள் முகாம், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என தமிழக அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்ட அரசாணை வெளியிடப்பட்டது. அத்துடன் இலங்கை தமிழர் மேம்பாட்டுக்காக ரூபாய் 317 கோடியில் புதிய நலத் திட்டங்களை சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

புதிய வீடுகள் கட்டித் தருதல், குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, குடிநீர் வசதி, சாலை வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக ரூ.317 கோடி ஒதுக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டும் திட்டத்தின் தொடக்க விழா இன்று நடைபெறுகின்றது. வேலூர் அடுத்த மேல்மொணவூரில் வசிக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவும், இன்று வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் நடைபெறுகிறது.

விழாவில் கலந்துகொள்ளும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 220 இலங்கை தமிழர் குடும்பங்கள் உட்பட 3510 பேருக்கு குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்கிறார்கள்.