அக்காவை கர்ப்பமாக்கிய தம்பி போக்சோ சட்டத்தின் கீழ் கைது
பிளஸ் 2 படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தம்பி முறையிலான சிறுவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், மாணவி தொட்டியத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது, தம்பி முறையிலான 10ம் வகுப்பு படிக்கும் சிறுவன், அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதில் மாணவி கர்ப்பமடைந்தாள்.
தற்போது, திருச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். அங்கு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து, மாணவிக்கு 17 வயது தான் ஆனதால் மருத்துவர்களுக்கு இந்த தகவல் தெரிய வந்தது.
இதனை அடுத்து, மருத்துவர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு உதவி மையத்திற்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து, முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, சிறுமிக்கு உறவுக்கார சிறுவன் பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்தது. இதனையடுத்து, சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து, திருச்சி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர்.