“தேம்பித் தேம்பி அழுத சிறுவன்” கண்ணீர் வரவழைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்
ஆதரவற்றோர் விடுதியில் பல நாட்களுக்குப் பிறகு தனது சகோதரியைப் பார்த்த மகிழ்ச்சியில் தம்பி கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் உள்ள அரசு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில், மாணவர்கள் தனியாகவும், மாணவியர் தனியாகவும் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை.
இதனால், விடுதியிலேயே அடைப்பட்டுள்ளதால், மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் பங்கேற்று, மாணவர்களிடம் பேசி அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்காக மாணவர்களும், மாணவியரும் ஒரே இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அப்போது அரவிந்தன் (14) என்ற மாணவன் அழுது கொண்டிருந்தான். அப்போது, அவனிடம் ஆசிரியர்கள் விசாரித்தனர். “என் அக்கா மீனாவை பார்த்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது, அவளைப் பார்க்க வேண்டும்” எனக் கலங்கியவாறு கூறினான்.
இதனையடுத்து, ஆசிரியர்கள், அரவிந்தனை அவனது அக்கா மீனா அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் அமர வைத்தார்கள். பல நாட்களுக்கு பின்பு அக்காவை பார்த்ததும், அரவிந்தன் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகர் ரோபோ சங்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “அரசு குழந்தைகள் இல்ல மாணவர்களிடம் மன இறுக்கத்தை போக்கி, ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்வை துவக்கியுள்ளேன். தமிழகம் முழுதும் இதுபோன்ற நிகழ்வுகள் நடத்த உள்ளேன். இந்த விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களில் ஐந்து பேரின் உயர்கல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன்” என்றார்.
