ஆசையாக வளர்த்த 40 நாய்களுக்கு தன் வீட்டைச் சுற்றி 40 சமாதிகள் கட்டிய நபர்
பெற்ற குழந்தைகளை போல் அன்பாக வளர்த்த 40 நாய்களை மறக்க முடியாததால் தன் வீட்டை சுற்றி சமாதி கட்டி இருக்கிறார் ஒரு மனிதர்.
சிவகங்கை மாவட்டம், பருத்தி கண்மாய் ஊரைச் சேர்ந்தவர் தங்கசாமி (77). திருமணம் ஆகாத தங்கசாமி அடிப்படை வசதிகளற்ற வீட்டில் ஆதரவின்றி தனியாக வாழ்ந்து வருகிறார். வயது முதிர்வால் இவரது உடல் கூனிப்போய் கைத்தடி உதவியுடன் சிரமப்பட்டு நடந்து செல்கிறார்.
முதியோர் உதவித்தொகையை மட்டுமே நம்பி வாழ்க்கை நகர்த்துகிறார் தங்கசாமி. அந்த உதவித்தொகையையும் தான் வளர்க்கும் நாய்களுக்காகவே செலவிட்டு வருகிறார். தங்கசாமிக்கு சிறு வயது முதற்கொண்டே நாய்கள் மீது அலாதியான அன்பு.
இதனால், 40க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு அவர் ஆதரவளித்து வந்துள்ளார். ஸ்ரீதேவி, சரிதா, துரைசாமி, நல்லம்மா, வெள்ளச்சி என்று அந்த நாய்களுக்கு பெயர் வைத்து அழைத்து வந்துள்ளார்.
அந்த நாய்களுக்கு பால், பிஸ்கட் வாங்கிக்கொடுத்து பாசமாக வளர்த்து வந்த தங்கசாமி, அந்த நாய்களுக்கு ஏதும் ஆனால் துடிதுடித்து போய்விடுவார். திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்து வந்த தங்கசாமிக்கு நாய்களே அவரது உலகமாக இருந்தது.
அந்த நாய்கள் ஒவ்வொன்றும் உயிரிழக்கும்போதும், எங்கேயும் தூக்கி வீசாமல், வெளியிடங்களில் புதைக்காமலும், தனது வீட்டை சுற்றியே புதைத்து சமாதி கட்டியிருக்கிறார் தங்கசாமி.
40க்கும் மேற்பட்ட நாய்களை வளத்த தங்கசாமியுடம் தற்போது ஒரே ஒரு நாய் மட்டுமே உள்ளது. அதுதான் தங்கசாமிக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் உள்ளது என்று அவர் உருக்கத்துடன் கூறினார்.