வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் முதல்வர் ஸ்டாலின் வீடு முன்பாக போராட்டம் நடத்துவோம் – அண்ணாமலை
சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் திமுக சொன்னபடி மீனவர்களுக்காக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது -
விவசாயிகள் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு மீனவர்களும் முக்கியமானவர்கள். உயிரை பணயம் வைத்து, நமக்காகத்தான் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்கிறார்கள்.அவர்களின் பிரச்சினைக்காக குரல் கொடுக்கிறது
பாஜக. மீன்பிடி தடை காலத்தில் 5000 ஆக இருந்த நிவாரணத் தொகையை 8000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இதுவரைக்கும் அந்த நிவாரணத்தொகை உயர்த்தவில்லை. மீனவ சமுதாயத்தை ஏமாற்றி வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்றதை தட்டிக் கேட்கவே நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்.
மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு உடனே நிறைவேற்றவில்லை என்றால் முதல்வர் ஸ்டாலின் வீடு முன்பாக போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.