நடிகர் விஜய் கோரிக்கை ஏற்பு - நீதிமன்றம் அதிரடியாக அறிவித்த உத்தரவு!
இங்கிலாந்திலிருந்து வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நடிகர் விஜய் நுழைவு வரி வசூலிக்கத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சில நாட்களுக்கு முன்பு தனி நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, நடிகர் விஜய் தரப்புக்கு கண்டம் தெரிவித்தார். மேலும், ரூ. 1 லட்சம் அபராதத்தை விதித்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து, நடிகர் விஜய் இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். ஆனால் தனி நீதிபதி அளித்த தீர்ப்பின் நகல் இல்லாததால், விஜய்யின் வழக்கு பட்டியலிடப்படவில்லை. தற்போது, இத்தீர்ப்பு நகல் இல்லாமல் வழக்கைப் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிடக் கோரி நடிகர் விஜய் சார்பில் கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, நடிகர் விஜய்யின் கோரிக்கையை ஏற்று, தீர்ப்பு நகலின்றி அவரது மனுவைப் பட்டியலிட உத்தரவிட்டிருக்கிறார்கள்.
இந்த வழக்கு விசாரணை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்க விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.