திமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஆரோக்கியசாமியை மடக்கிப்பிடிக்க 3 தனிப்படை விரைந்தது!
திருச்சி, முத்தப்புடையான்பட்டி ஆற்றுப்படுகையில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீசார் கடந்த 13ம் தேதி அதிகாலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு சென்ற போலீசார் டிப்பர் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை மடக்கிப்பிடித்தனர். ஆனால் இது திமுக மணப்பாறை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆரோக்கியசாமி சொந்தமானது என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது . இதன் பிறகு, காவல் நிலையம் வந்த ஆரோக்கியசாமி போலீசார் அனுமதி இல்லாமல், வாகனங்களை எடுத்துச் சென்றுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், தான் திமுக காரன் என்று போலீசாரை மிரட்டியுள்ளார். இதனையடுத்து, வாகனங்களை தவறவிட்ட மணப்பாறை காவல் ஆணையர் அன்பழகனை திருச்சி காவல்துறை தலைவர் ராதிகா பணியிடை நீக்கம் செய்துவிட்டார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர்கள் மனோகர் ,பவுல் சேகர், கார்த்திகேயன் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த அருள்சேசுராஜ் மற்றும் சவரி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்டுத்தி லால்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விஷயம் தற்போது பூதாகரமாக வெடித்ததையடுத்து, நேற்று திமுக தலைமை திமுக மணப்பாறை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆரோக்கியசாமியை கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மணல் லாரியை விடுவிக்க போலீசை மிரட்டிய சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக நிர்வாகி பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசை மிரட்டிய நிர்வாகி ஆரோக்கியசாமி திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதையடுத்து, 3 தனிப்படை அமைக்கப்பட்டு அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.