மூளையில் ஏற்பட்ட கருப்பு பூஞ்சை தொற்று - அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றிய அரசு மருத்துவர்கள்!
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார்.
ஆனால், வீட்டிற்கு சென்ற இவருக்கு தொடர்ந்து தலைவலி மற்றும் மூக்கு அடைப்பு ஏற்பட்டு அவதிப்பட்டார். இதனால், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனையில் அவருக்கு மூக்கு மற்றும் மூளை பகுதிகளில் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை மருத்துவர்கள் அறிந்தனர்.
இதனையடுத்து, அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, மூளையில் ஏற்பட்ட கருப்பு பூஞ்சை தொற்றினை அகற்ற முடிவு செய்தனர்.
சேலம் அரசு மருத்துவமனை மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறை தலைவர் சங்கர் தலைமையிலான மருத்துவ குழுவினர், சுமார் 4 மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர், வெற்றிகரமாக மூளை பகுதியில் இருந்த கருப்பு பூஞ்சை தொற்றினை அகற்றினார்கள்.
பின்னர், அவருக்கு கருப்பு பூஞ்சைக்கான எதிர் உயிரி மருந்துகள் மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்துகள் அளிக்கப்பட்டு வந்ததால் தற்போது அவர் குணமடைந்திருக்கிறார். அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவினரை மருத்துவமனை முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார்.