கிணற்றில் தவறி விழுந்த சிறுமி : திடீரென சுவர் இடிந்ததால் வேடிக்கை பார்க்க வந்த 40 பேர் கிணற்றில் விழுந்த அதிர்ச்சி சம்பவம்!
மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது விடிஷா மாவட்டம். இந்த மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நேற்று மாலை 8 வயது சிறுமி கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது, அந்த சிறுமி திடீரென கிணற்றில் தவறி விழுந்துவிட்டாள். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினருடன் போலீசார் விரைந்து வந்தனர்.
அதற்குள் கிணற்றைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் கூடி விட்டது. கிராமம் முழுக்க இந்த தகவல் தீயாய் பரவியதால் கிராம மக்கள் அனைவரும் கிணற்றின் சுவரை சுற்றி நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கிணற்றின் ஒரே சுவரில் 40க்கும் மேற்பட்டோர் சாய்ந்து நின்று கொண்டிருந்ததால் அந்த சுவர் திடீரென இடிந்து திடீரென சரிந்தது. இதனால் சுமார் 40 பேர் கிணற்றுக்குள் தவறி விழுந்தனர்.
40 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் ஏராளமானோர் விழுந்து உயிருக்கு போராடினார்கள். அவர்களை மீட்கும் பணி தற்போது வேகமாக நடந்து வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த மாநில பேரிடர் மீட்புப்படையினர் அங்கு விரைந்து சென்று பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
16 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மற்ற அனைவரையும் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்தவரும் மத்தியப் பிரதேச கல்வி அமைச்சருமான விஸ்வாஸ் சரங் மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு வருகிறார். மீட்புப் பணிகள் குறித்த தகவல்களை முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கேட்டறிந்து வருகிறார்.