கேரளாவில் அதிபயங்கரமான ‘ஜிகா’ வைரஸ் தொற்று ஆரம்பம் - பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக உயர்வு - மக்கள் அச்சம்
கேரளாவில் கொரோனா வைரஸ் 2வது அலையின் பாதிப்பு இன்னும் முடியாத நிலையில், தற்போது ஜிகா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிபயங்கரமான ‘ஜிகா’ வைரஸ் ஒருவரை தாக்கினால் அவர்களுக்கு காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படும் ஆபத்து உள்ளது.
ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ், மஞ்சள் காய்ச்சல், டெங்கு காய்ச்சலும் பரவுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு பரவினால், அவர் மூலம் வயிற்றில் உள்ள சிசுவும் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவு ஏற்படக்கூடும்.
இதனால் குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவும் கூட சில நேரங்களில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள் வரை உடலில் இருக்கும் பாதிப்பு ஏற்பட்ட 2 முதல் 7 வது நாளில் அறிகுறிகள் தென்படும்.
இந்நிலையில் நேற்று திருவனந்தபுரத்தை சேர்ந்த மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
திருவனந்தபுரம் ஆனையரா பகுதியை சேர்ந்த 35 மற்றும் 29 வயதான 2 பெண்கள், குன்னுக்குழி பகுதியை சேர்ந்த 38 வயதான பெண், பட்டம் பகுதியை சேர்ந்த 33 வயது ஆண், கிழக்கேகோட்டை பகுதியை சேர்ந்த 44 வயதான பெண் ஆகியோருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாதாக சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்திருக்கிறார்.
பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதன் மூலம் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்திருக்கிறது.