தமிழக முதல்வரிடம் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டினார் நடிகர் வடிவேலு!
ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தியவர் என நடிகர் வடிவேலு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
கொரோனா 2ம் அலை கட்டுப்படுத்த முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி உதவி வழங்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று மக்கள் பலர் நிதியுதவி வழங்கினர். முதல்வர் பொது நிவாரண நிதிக்கு கிடைக்கப்பெற்ற நிதி விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என முதல்வர் உறுதியளித்தார். அதன்படியே, அந்த விவரங்களை அறிந்து கொள்ள இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுவரை ரூ. 480 கோடி நிதி திரண்டு உள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நகைச்சுவை நடிகர் வடிவேலு முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்சம் வழங்கியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது நடிகர் வடிவேலு பேசுகையில், ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே உலகம் உற்றுப் பார்க்கும் அளவுக்கு கொரோனாவை கட்டுப்படுத்தி இருக்கிறார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின். இது மக்களுக்கு பொற்காலம். மேலும் கொங்குநாடு விவகாரம் பேசிய அவர், நல்லா இருக்க தமிழ்நாட்டை எதுக்கு பிடிச்சிகிட்டு. நான் அரசியல் பேசல. இதெல்லாம் கேட்கும்போது தலை சுத்துது. என்றார்.