திடீரென மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 50க்கும் மேற்பட்டோர் பலி! ராஜஸ்தான், உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்!
ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் ஒரே நாளில் மின்னல் தாக்கியதில் 7 குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. உ.பி.யில் மட்டும் திடீரென மின்னல் தாக்கியதில் 30 பேர் பரிதாபமாக பலியாயினர். பிரயாக்ராஜ் மாவட்டத்தில் 14 பேரும், கான்பூரில் 5 பேரும், கெளசாம்பி மாவட்டத்தில் 4 பேரும் மின்னல் தாக்கி மரணமடைந்தனர்.
அதேபோல், ராஜஸ்தான் மாநிலத்தில் 19 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். ஜெய்ப்பூர் அருகே சுற்றுலா தலமான அமர் அரண்மனையின் கண்காணிப்பு கோபுரத்தில் சுற்றுலா பயணிகள் சிலர் மழையை ரசித்த வண்ணம் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.
இதில் 7 குழந்தைகள் உள்பட 19 பேர் பரிதபமாக பலியாயினர். படுகாயமடைந்த 17 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதனையடுத்து, மின்னல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.
ராஜஸ்தானில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.