2 ஆண்டுகளுக்கு முன் கணவரை தொலைத்துவிட்டு குழந்தையுடன் சுற்றித்திரிந்த பெண்! கணவருடன் சேர்ந்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம்!
திருச்செந்தூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பெண் குழந்தையுடன் தனியே சுற்றித்திரிந்த கர்ப்பிணி பெண்ணை, சமூக நலத்துறையினர் மீட்டு காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.
அப்போது அவருக்கு பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த பெண்ணுக்கு அளிக்கப்பட்ட மனநல ஆலோசனை மூலம் சுய நினைவும் திரும்பியது. அப்போதுதான் தெரிந்தது அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிளாச்சி என்றும், அவரது கணவர் பெயர் உசோகொய் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து, அப்பெண்ணை, கணவருடன் சேர்த்து வைக்க, தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஒடிசா மாநிலம் போலாங்கி மாவட்டத்தை சேர்ந்த கணவர் உசோகொயை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
அம்மாநில போலீசார் உதவியுடன் தூத்துக்குடிக்கு கணவர் உசோகொயை அழைத்து வந்தனர். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், பிளாச்சி மற்றும் அவரது இரு குழந்தைகளையும் கணவர் உசோகொயிடம் ஒப்படைத்தார்.
அப்போது, குடும்பத்தை சேர்த்து வைத்த மகிழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடினர். மேலும், தம்பதியினருக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் புத்தாடைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் ஆட்சியர்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி அரசு மருத்துவமனை முதல்வர் நேரு மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.