குடும்பத் தகராறில் கதற கதற கொடூரமாக மகனை குத்தி கொலை செய்த தந்தை!
கிருஷ்ணகிரி பழையபேட்டை மில்லத் நகரை சேர்ந்தவர் நிசார் அகமது (55). இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் பைரோஸ் அகமது (23). இவர் இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பாத்திமா. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
தந்தையும், மகனும் இருவரும் அடுத்தடுத்த வீடுகளில் வாழ்ந்து வந்தனர். இதனையடுத்து, மதுப்பழக்கத்திற்கு அடிமையான நிசார் அகமது, குடித்து விட்டு அடிக்கடி மகன் பைரோஸ் உடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மறுபடியும் தந்தைக்கும், மகனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, மதுபோதையில் இருந்த நிசார் அகமது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், மகனை சரமாரியாக குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி பைரோஸ் அகமது பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி, நிசார் அகமதுவை கைது செய்தனர்.