கொரோனா ஒழிய வேண்டுமென சுட்டெரிக்கும் வெயிலில் கூட 14 கி.மீ தூரம் அங்கப்பிரதட்சணம் செய்த பெண்!
உலகம் முழுவதும் கொரோனா ஒழிய வேண்டும் என்று பெண் ஒருவர் 14 கிலோ மீட்டர் தூரம் வரை கிரிவலப்பாதையில் அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்தவர் அருணாச்சல தேவி (45). இவர் தீவிர சிவ பக்தர்.
ஆந்திராவில் சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். சிவன் மீது கொண்ட அன்பால் 15 வருடத்திற்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்து தங்கியுள்ளார். திருவண்ணாமலையில் மாதம் தோறும் பவுர்ணமி நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். கொரோனா தோற்று காரணமாக மாவட்ட நிர்வாகம் கடந்த ஆண்டு முதல் கிரிவலம் செல்ல தடை விதித்திருக்கிறது.
இந்நிலையில், அருணாச்சல தேவி அங்கப்பிரதட்சணம் செய்திருக்கிறார். உலக மக்கள் நன்மைக்காக ஏற்கனவே திருவண்ணாமலையில் 3 முறை அங்கப்பிரதட்சணம் செய்திருக்கிறார் இவர். தற்போது உலக முழுவதும் கொரோனா ஒழிய வேண்டும் என்று 4வது முறையாக அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார்.
சுட்டெரிக்கும் வெயிலில் கூட அவர் 14 கிலோ மீட்டர் தூரம் அங்கப்பிரதட்சணம் செய்திருப்பது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
