தனுஜாவை தொடர்ந்து… ‘பீப்.... சவுண்டில்’ போலீசாருடன் மதுபோதையில் விசிக வழக்கறிஞர் தகராறு!
நன்றாக குடித்து விட்டு காவலர்களிடம் சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் தகராறு செய்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சென்னை கொண்டி தோப்பு காவலர் குடியிருப்பு அருகே வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று, அரசு பேருந்து மீது மோதியது போல சென்று நின்றது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் கார் அருகில் சென்றனர்.
அப்போது, காரில் இருந்த நபர் நன்றாக குடித்திருந்தது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் முககவசமும் அணியாமல் இருந்ததை கண்டு போலீசார் விசாரணை செய்தனர். ஆனால், அவர் தான் ஒரு வழக்கறிஞர் என்று கூறி காவலர்களிடம் தகராறு செய்ய ஆரம்பித்தார்.
விசாரணையில் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பது தெரியவந்தது. இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் மதுபோதையில் இருந்த வழக்கறிஞர் மீது வழக்கு பதிவு செய்தார். அதுமட்டுமல்லாமல், அவரது காரை பறிமுதல் செய்தார்.
போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஏற்கெனவே, வழக்கறிஞர் தனுஜா காவலர்களிடம் தகாத முறையில் பேசி தகராறு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


