அப்பா, அம்மா இறந்துட்டாங்க - 45 நாள் ஆன குழந்தைக்கு தாயாக மாறிய 7 வயது அக்கா!
ஒடிசாவின் நிமத்பூரைச் சேர்ந்தவர் கமலேஷ் பாண்டே. இவருடைய மனைவி ஸ்மிதா பாண்டா. கமலேஷ் ரயில்வேயில் வேலை பார்த்து வந்தார். ஸ்மிதா பகுதிநேர செவிலியராகவும் பணியாற்றி வந்தார்.
இவர்களுக்கு கிருஷ்ணா என்ற 7 வயது பெண் இருக்கிறாள். இந்நிலையில், மீண்டும் கர்த்தரித்த ஸ்மிதா 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் ஸ்மிதாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. உடனடியாக ஸ்மிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஒரு அழகாக ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள் ஸ்மிதா. குழந்தை பெற்றெடுத்த ஏழு நாட்களில் சிகிச்சை பலனின்றி ஸ்மிதா உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, ஸ்மிதாவின் கணவர் கமலேஷூக்கும் கொரோனா தொற்று தாக்கியது. இதில், அவரும் உயிரிழந்தார். தாய், தந்தை இருவரையும் பிரிந்த பச்சிளம் குழந்தையுடன் கிருஷ்ணா அனாதையானாள். இவர்கள் இருவரையும், ஸ்மிதாவின் கொழுந்தனார் பாதுகாத்து வருகிறார்.
தன்னுடைய தம்பிக்கு உணவு வழங்குவதும், பாட்டு பாடி தூங்க வைப்பது என தம்பிக்கு தாயாக மாறியிருக்கிறாள் கிருஷ்ணா. இது குறித்து கிருஷ்ணாவின் சித்தப்பா கூறுகையில், தினக்கூலியான எனக்கு குழந்தைகளின் எதிர்காலம் பற்றி கவலை உள்ளது.
அரசாங்கம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார். அப்பா, அம்மா இறந்த நிலையில், 45 நாள் ஆன குழந்தைக்கு தாயாக மாறிய கிருஷ்ணாவின் செயல் அப்பகுதி மக்களை நெகிழ வைத்துள்ளது.

