தருமபுரி அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை கடத்தல் - போலீசார் தீவிர விசாரணை!

tamilnadu-samugam
By Nandhini Jun 20, 2021 10:55 AM GMT
Report

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாச்சனூரைச் சேர்ந்தவர் அருள்மணி. இவர் தச்சு தொழிலாளி. இவரது மனைவி மாலினி. இவர் நிறைமாத கர்பிணி. மாலினிக்கு பிரசவ வலி வந்ததையடுத்து, கடந்த 18ம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் மாலினிக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்தது. இன்று பிரசவ வார்டில் இருந்த மாலினி கழிவறைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்த போது படுக்கையில் இருந்த குழந்தை காணவில்லை.

இதைக் கண்டதும் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து வெளியே இருந்த தனது கணவரான அருள்மணிக்கு தகவல் கொடுத்தார். அவர் மருத்துவமனை புறகாவல் நிலையத்தில் தனது ஆண் குழந்தை காணவில்லை புகார் கொடுத்தார். இந்த புகாரை பதிவு செய்த போலீசார் மருத்துவமனையில் பச்சிளங்குழந்தை சிகிச்சை பிரிவில் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் பர்தா அணிந்த பெண் ஒருவர் குழந்தையை தூக்கி கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனையடுத்து அந்த பெண் யார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த ஆண் குழந்தை கடத்தபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தருமபுரி அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை கடத்தல் - போலீசார் தீவிர விசாரணை! | Tamilnadu Samugam