ஆன்லைன் வகுப்பில் மகளுக்காக கொட்டும் மழையில் நனைந்து குடை பிடித்த தந்தை!
நெட்வொர்க் பிரச்னையால் மழை பெய்யும் போது வெளியே அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்குபெற்ற மாணவிக்கு அவளது தந்தை குடை பிடித்து நிற்கும் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டாலும் கூட இன்றும் சரியாக நெர்வொர்க் சில பகுதிகளில் கிடைப்பதில்லை.
உதாரணமாக கர்நாடாக மாநிலம் தக்ஷின கன்னட மாவட்டத்தில் குத்திகாரு கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் வீட்டிற்குள் மொபைல் சிக்னல் கிடைக்காத காரணத்தால் வெட்ட வெளியில் அமர்ந்துதான் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், மாணவி ஒருவர் வீட்டிற்கு வெளியே அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று கொண்டிருந்தார். அப்போது திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இதனால், மகளின் படிப்பிற்கு எவ்வித தடைப்பட்டுவிடாது என்பதற்காக அவளின் தந்தை நனைந்தவாறே மழையில் குடை பிடித்துள்ளார்.
இதை அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர் பார்த்துள்ளார். உடனே போட்டோ எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். அந்தப் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

