இன்ஸ்டாகிராமில் மிகப்பெரிய பிழை - கண்டுபிடித்து சொன்ன இளைஞருக்கு அடித்த பேரதிர்ஷ்டம்!
இன்ஸ்டாகிராமில் உள்ள பிழையை சுட்டிக்காட்டியதற்காக பொறியியல் மாணவர் ஒருவருக்கு பேஸ்புக் நிறுவனம் ரூ.22 லட்சம் பரிசு கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் மயூர்.
இவர் கணினி பொறியாளர். கணினி மொழிகளான சி++ மற்றும் பைதானில் இவர் திறமை கொண்டனர். அப்போது இன்ஸ்டாகிராமில் பிரைவட் கணக்கு வைத்திருந்தாலும் கூட அதிலுள்ள ஒரு பிழை, யாரை வேண்டுமானாலும் தவறாக நுழைய அனுமதித்து பயனர்களின் புகைப்படங்கள், ஸ்டோரீஸ் ஆகியவற்றை பார்க்க முடிகிறது என கண்டுபிடித்தார்.
இதனை கடந்த மாதம் ஏப்ரல் 16-ம் தேதி பேஸ்புக்கிற்கு மயூர் சுட்டிக்காட்டி உள்ளார். இதனையடுத்து, சில நாட்களில் மயூருக்கு பதிலளித்த பேஸ்புக் நிறுவனம், இது குறித்த கூடுதல் தகவல்களைக் கேட்டறிந்தது.
மயூரும் இது தொடர்பான தொழில்நுட்ப ரீதியான தகவல்களை கொடுத்துள்ளார். இந்த பிழையை ஜூன் 15-ம் தேதி பேஸ்புக் சரி செய்துள்ளது. பிழையை திருத்துவதற்கு உதவிய மயூரிக்கு 30 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.22 லட்சம்) பரிசு வழங்கி கவுரவித்துள்ளது.
எதிர்காலத்திலும் இதுபோன்று நிறைய அறிக்கைகளை உங்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம் என மயூரிடம் பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.