தினமும் இரவில் சொகுசுக் காரில் கணவன்-மனைவி செய்த காரியம் : காட்டிக் கொடுத்த சிசிடிவி!
சென்னையை அடுத்து பாடி ஜெகதாம்பிகை நகரைச் சேர்ந்தவர் பூபாலன் (37). இவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த மாதம் 2-ம் தேதி கடைக்கு வெளியே கூண்டில் வைக்கப்பட்டிருந்த 15 நாட்டுக் கோழிகள் திருடு போனது.
இதேபோல், கொரட்டூர், போத்தியம்மன் கோயில் தெருவை சேர்ந்த இந்திரா (56) என்பவரின் வீட்டு முன்பு கட்டி வைக்கப்பட்டிருந்த 2 ஆடுகள் அதே தேதியில் இரவு காணாமல் போயியுள்ளது.
இது குறித்து, இந்திரா காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்தனர்.
அப்போது, அப்பகுதி வழியே ஒரு சொகுசு கார் ஒன்று வந்தது. சொகுசு காரிலிருந்து கைக் குழந்தையுடன் இறங்கிய ஆண் மற்றும் பெண், குறித்த ஆடு மற்றும் கோழிகளை திருடி காரில் கொண்டு போனது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால், அவர்கள் யார் என்பது தெளிவாக தெரியவில்லை. இதனைத்தொடர்ந்து போலீசார் கார் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கொரட்டூர் 200 அடி சாலையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபடடனர். அப்போது, போலீசாரால் தேடப்பட்ட கார் அவ்வழியாக வந்தது. அந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது, காரில் ஒரு ஆணும், பெண்ணும் கைக் குழந்தையுடன் இருந்தனர்.
விசாரணையில், அவர்கள் ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த அஷ்ரப் (38), அவரது மனைவி லட்சுமி (36) என்பதும் தெரியவந்தது. இவர்கள் நள்ளிரவில் காரில் வந்து, பல்வேறு பகுதிகளில் நோட்டமிட்டு, சாலையோரம் உள்ள கோழி, ஆடுகளை திருடி அதை மறுநாள் விற்றுவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.