கந்துவட்டி தொல்லையால் வீடியோ வெளியிட்டு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!
ஊரடங்கில் கந்துவட்டி கட்டச்சொல்லி தொல்லை கொடுத்ததால் வீடியோ வெளியிட்டு இளைஞர்கள் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை, மகபூப்பாளையத்தைச் சேர்ந்தவர் முஹமது அலி. இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். முஹமது அலி, அதே பகுதியில் உணவகம் வைத்து நடத்தி வருகிறார். இவர் கடையை மேம்படுத்துவதற்காக செல்வக்குமார் என்பவரிடம் 3 லட்சம் வரை கடனாக வாங்கியுள்ளார்.
ஊரடங்கு காரணமாக உணவகம் மூடப்பட்டது. இதனால், போதிய வருமானம் போன்றி முஹமது தவித்து வந்தார். கடனை திரும்ப செலுத்தமுடியாததால் கடன் கொடுத்தவர்கள் தொடர்ச்சியாக கூடுதல் வட்டி கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர்.
வாங்கிய தொகையை விட அதிகளவு செலுத்திய நிலையிலும் தொடர்ச்சியாக வீட்டிற்கு வந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில், தனது தற்கொலைக்கு இவர்கள்தான் காரணம் என கூறி நேற்றிரவு தற்கொலை வீடியோ ஒன்றை வெளியிட்டார் முஹமது. வீடியோவை வெளியிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார் முஹமது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கு முன்பாக முஹமது வெளியிட்ட வீடியோவில், தனக்கு வட்டிதொகையை கேட்டு செல்வக்குமார் அவரது கூட்டாளிகள் ஜெய்சிங், மாரிமுத்து உள்ளிட்ட சிலர் தொடர்ந்து தொல்லை அளித்து இழிவுபடுத்தியதாகவும், தனது நண்பர்களும் எனக்கு உதவிய நிலையிலும் வட்டிதொகையை கட்ட முடியாத தற்கொலை செய்வதாகவும், எனது தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரியும், தனது உயிரிழப்பிற்கு பின் தனது மனைவிக்கு நண்பர்களுக்கோ தொல்லை தரக்கூடாது என தெரிவித்துள்ளார்.
முஹமது தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முஹமது குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளனர்.
கந்துவட்டி தொல்லையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.