108 ஆம்புலன்சில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஊழியர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்!
கோவை அருகே பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பிரசவம் பார்த்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை அளித்துள்ளது. தற்போது, தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர்.
கோவை மாவட்டம் வெள்ளலூரைச் சேர்ந்தவர் சபானா (20). இவர் நிறைமாத கர்ப்பிணி. இவருக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால், சபானா வலியால் துடிதுடித்துள்ளார்.
உடனே, அவரது கணவர் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து அழைத்துள்ளார். உடனே, தகவல் அறிந்ததும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து கர்ப்பிணிப் பெண் சபானாவை ஆம்புலன்ஸுக்குள் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அதிக வலியால் சபானா துடித்து கதறியுள்ளார்.
உடனே, ஆம்புலன்ஸை நிறுத்தி பிரசவம் பார்க்கும் சூழல் ஏற்பட்டது. அவசரத்தை உணர்ந்த இஎம்டி பிரதாப் மற்றும் பைலட் அந்தோணி கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிரசவம் பார்க்க முன்வந்தனர்.
பிரசவத்தில் அப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது, தாயும், சேயும் நலமாக உள்ளனர். அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவசரம் உணர்ந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பிரசவம் பார்த்து, ஆண் குழந்தை நலமுடன் பிறந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.