தமிழ்மொழி வளர்ச்சிக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி மனு!
தமிழ்மொழி வளர்ச்சிக்கு 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய உத்தரவிடக் கோரிய மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்க என்று உயர்நீதி மன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:
இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட ஆறு மொழிகள் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் மிகவும் பழமையானது தமிழ். இன்றைக்கு உலகம் முழுவதும் 100 மில்லியன் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
மற்றொரு செம்மொழியான சமஸ்கிருதம் பேசுவோர் 14 ஆயிரம் பேர் உள்ளனர். சமஸ்கிருத மொழியைக் கற்றுக் கொள்ள இந்தியாவில் 27 கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இப்படி இருக்க சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு கடந்த 3 வருடங்களில் ரூ.643.85 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இது தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கிய தொகையை விட 22 சதவீதம் அதிகம்.
இது ஏற்புடையது அல்ல. எனவே செம்மொழியான தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ரூபாய் 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அது மட்டுமல்லாது சென்னையில் அமைந்துள்ள மத்திய செம்மொழிக் கல்வி நிறுவனத்தை நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக மாற்ற வேண்டும்.
செம்மொழியான தமிழ் வளர்ச்சிக்கு இந்தியா முழுவதும் கல்வி நிலையங்கள் துவங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அமர்வு, மனுதாரரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்டு மாதம் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.