கடந்த மாதம் ரூ.2000 நிவாரணம் பெறாதவர்கள் ரேஷனில் இந்த மாதம் பெற்றுக்கொள்ளலாம் - தமிழக அரசு
கடந்த மாதம் கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ. 2000 ரூபாயை பெறாதவர்கள் இந்த மாதம் ரேஷன் கடையில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு -
தமிழகத்தில் 2.09 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு மே.15 முதல் கொரோனா நிவாரண உதவித்தொகை முதல் தவணையாக ரூ. 2000 வழங்கப்படுகிறது. நேற்று வரை 98.4 சதவீதம் குடும்பத்தினர் நிவாரண உதவித்தொகை பெற்றுள்ளனர்.
மீதமுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நோய் தொற்றால் தனிமை முழு ஊரடங்கால் சொந்த ஊர் சென்றது, முகவரி மாற்றம், போக்குவரத்து வசதி இல்லாததால் ரேஷன் கடைக்கு செல்ல முடியாத நிலை போன்றவற்றால் நிவாரண உதவித் தொகை பெற இயலவில்லை. இது அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.
எனவே அவர்கள் நிவாரண உதவித்தொகையை இந்த மாதம் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.