குன்னூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் படுகாயம்!
குன்னூரில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும்போது, எதிர்பாராத விதமாக குண்டு வெடித்து சிதறியதில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள சித்தி விநாயகர் கோவில் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
அங்கு பூட்டியிருந்த வீட்டில் கண்ணன் (30), அபு (26) ஆகியோர் வெடி மருந்துகள், கம்பிகளை கொண்டு நாட்டு வெடிகுண்டு தயாரித்து வந்தனர். வெடிகுண்டு தயாரித்த போது, எதிர்பாராத விதமாக நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் கண்ணன், அபு மற்றும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த 10 வயது சிறுவன் ஶ்ரீநாத் ஆகியோர் விபத்தில் படுகாயம் அடைந்தார்கள். உடனடியாக படுகாயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் டிஎஸ்பி சுரேஷ், குன்னூர் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் ஆகியோர், மருத்துவமனைக்கு நேரில் சென்று கண்ணன், அபு ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார்கள். காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதா? என்று போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.