சிவகங்கை அரசு மருத்துவமனையில் தங்குமிடம் ஆக்கிரமிப்பு - நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிவகங்கை நகராட்சி சார்பில் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்க திட்டம் மூலமாக கட்டப்பட்ட பார்வையாளர்கள் சிறப்பு தங்கும் இடம் ஜெராக்ஸ் கடையாக மாற்றப்பட்டுள்ளது.
ஒரு ஜெராக்ஸ் 5 ரூபாய் பெறுகின்றனர். மகப்பேறு மருத்துவமனைக்கு வரக்கூடிய பொது மக்கள் தங்குவதற்காக தங்கும்விடுதி கட்டி முடித்து நீண்ட காலமாக பயன்பாட்டுக்கு கொண்டு வராததால் ரோட்டோரத்திலேயே மக்கள் தங்கி வருகின்றனர்.
தற்போது அது ஜெராக்ஸ் எடுக்கும் இடமாக மாறியுள்ளது. ஒரே ஒரு பிரிண்டரை வைத்து ஐந்து ரூபாய்க்கு ஒரு ஜெராக்ஸ் என்று வசூல் செய்யப்படுகிறது. சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடைகளே இல்லை.
மருத்துவமனைக்கு தேவையான ஆவணங்கள் ஏதும் எடுக்க வேண்டும் என்றால் பொது மக்கள் 2 கி.மி தூரம் அலைந்து வருவதை கருத்தில் கொண்டு இந்த தங்குமிடத்தில் யாரையும் தங்க விடாமல் ஜெராக்ஸ் எடுக்கும் இடமாக மாற்றியுள்ளனர்.
மக்கள் வசதிக்காக இந்த பார்வையாளர்கள் தங்கும் இடத்தை பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, சாலையோரங்களில் மக்களை தங்க விடாமல் தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.