மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம் குடித்த இருவர் பலி!
மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்த இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், இருவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை சேந்தங்குடியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் அச்சக தொழிலாளி பிரபு (33). இவர் அதே பகுதியை சேர்ந்த அம்மாசி மகன் லோடுமேன் செல்வம் (36), வீராசாமி (52), சரத்குமார் (28), உள்ளிட்ட 4 பேர் அப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ள சாராயத்தை வாங்கி குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற சற்று நேரத்தில் இவருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, பிரபுவை அவரது உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு பரிதாபமாக இறந்தார்.
இதைத்தொடர்ந்து செல்வமும் கண்பார்வை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே உயிரிழந்தார்.
வீராசாமி மற்றும் சரத்குமார் உள்ளிட்ட 2 பேர் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சாராயம் குடித்து இருவர் உயிரிழந்ததுடன் மேலும் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.