ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விவகாரம் - வைகோ, தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து!
கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் இந்தப் பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளை ரத்து செய்யப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
அந்தக் கோரிக்கைக்கு இதற்போது தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் மத்திய புலனாய்வுத் துறை வசம் உள்ள வழக்குகள் தவிர பிற வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது தலைவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வைகோ, நல்லகண்ணு, கோபாலகிருஷ்ணன், தினகரன், பிரேமலதா, சுதீஷ், அனிதா ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழகு முத்து பாண்டியன், ராஜா உள்ளிட்டோர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. விசாரணை ஆணையம் பரிந்துரைத்ததன் பேரில் இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.