சிங்கம்புணயில் சித்திரைக்கு பின் புதுமழைக்கு பொன் ஏர் இடும் நிகழ்வு துவக்கம்!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மழை பெய்ததை தொடந்து அங்கு பாரம்பரிய ' பொன் ஏர் ' விடும் விழா நடந்தது.
தமிழக விவசாயிகள் தமிழ் வருடப் பிறப்பான சித்திரை முதல் நாள் தங்கள் நிலங்களில் வழிபாடு செய்து முதல் ஏர் உழுவார்கள். ஆனால், சிங்கம்புணரி விவசாயிகள் பொன் ஏர் இடுதல் என்ற பெயரில் ஆண்டுதோறும் சித்திரையில் முதல் மழை பெய்ததும், அதற்குப் பிறகு வரும் நல்ல நாளில் இந்த பொன் ஏர் விடும் நிகழ்ச்சியை கொண்டாடுகின்றனர்.
தமிழகத்தில் வேறு எந்த கோயிலிலும் இல்லாத நிகழ்வு சிங்கம்புணரி கோயிலில் நடைபெறுகிறது. இங்கு கடந்த வாரம் இந்த தமிழ் புத்தாண்டின் முதல் மழை பெய்தது. இதைத் தொடர்ந்து, இன்று பொன் ஏர் விடும் விழா நடந்தது.
சேவுகபெருமாள் கோயிலில் இருந்து மரியாதையுடன் தேவஸ்தான ஊழியர்கள், கிராமத்தார்கள், கோயில் பணியாளர்கள், கோயில் நிலத்தில் பணியாற்றும் பண்ணைத் தொழிலாளர்கள் அனைவரும் சென்று கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் கோயில் மாடுகளைப் பூட்டி பொன் ஏர் இட்டு இறைவனை வழிபட்டனர்.
இதே நேரத்தில் சிங்கம்புணரி மற்றும் சுற்றியுள்ள கிராமத்து விவசாயிகள் அனைவரும் அவரவர் குல தெய்வ கோயிலிலிருந்து புறப்பட்டு தங்களது நிலங்களில் பொன் ஏர் இட்டு வழிபட்டனர். பொன் ஏர் இடும் நிகழ்வு சித்திரையில் புதுமழைக்குப் பிறகு நல்ல நாள் பார்த்து ஏர் உழுவது நல்ல மழைக்கும், நல்ல விளைச்சலுக்கும் வழி வகுக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.