ஒசூரில் கருப்பு பூஞ்சை நோய்யால் பாதிக்கப்பட்ட கூலித்தொழிலாளியின் இடது கண் அகற்றம்!
கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு, கருப்பு பூஞ்சை நோய் (மியூகோர் மைகோசிஸ்) என்ற தொற்று தற்போது தமிழகத்தில் பரவத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ஓசூரில் கருப்புபூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளியின் கண்ணை அறுவை சிகிச்சை மூலம் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பசவராஜ் (45).இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சர்க்கரை நோய் இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 1 வாரத்துக்கு முன்பு இடது கண் பார்வை பாதிக்கப்பட்டிருப்பதாக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு கண் பார்வை குறைபாடு சரியாக வில்லை.
இதனையடுத்து, அவர் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, பசவராஜை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் உள்ளதை கண்டுபிடித்தனர். இதனால், அவருடைய கண் பாதிக்கப்பட்டிருந்தது. உடனடியாக பாதிக்கப்பட்ட கண்ணை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். நேற்று மருத்துவ குழுவினர் சுமார் 4 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து, வெற்றிகரமாக இடது கண்ணை அகற்றியுள்ளனர். தற்போது பசவராஜுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பேசிய மருத்துவர் சுந்தரவேல் கூறுகையில், பல தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று விட்டு தாமதமாக வந்ததால் நோயாளிக்கு கண் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கண்ணை அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்றார்.