முதல்வர் ஸ்டாலின் கையில் வெற்றி வேலுடன் காட்சியளிக்கும் போஸ்டரால் பரபரப்பு!
அரசியல் தலைநகரமாக விளங்கும் மதுரையில் அரசியல் கட்சி தலைவர்களை வாழ்த்தி வரவேற்று ஒட்டப்படும் போஸ்டர்கள் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனல் பறக்கும் 'அரசியல் பஞ்ச் டயலாக்குகள் ' வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் எதிர் கட்சியினரை தெறிக்க விடும் அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தும். இதில் மதுரைக்காரர்களை யாராலும் மிஞ்ச முடியாது.
இந்நிலையில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவினர் 'வெற்றிவேல், வீரவேல் ' என்று முழங்கியும், முன் வைத்தும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் அந்த 'வெற்றிவேல் இறுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் வசமே' என்பதை சூசகமாக தெரிவிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் கையில் வெற்றி வேலுடன் காட்சியளிக்கும் போஸ்டரில் முதல்வர் ஸ்டாலினை வாழ்த்தி 'தமிழ் வேலே' என்றும் மற்றும் "கழகத்துக்கு வாக்களித்து காவிகளை கலங்கடித்த கண்ணியமிக்க வாக்காளர்களுக்கு நன்றி" என்ற வாசகங்கள் அடங்கிய இரண்டு போஸ்டர்கள் மதுரை மாநகரில் அனைத்து முக்கிய பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. இது, அரசியல் வட்டாரத்திலும், பொது மக்கள் மத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.