இனி கருவிழி மூலம் ரேஷன் கடைகளில் பொருட்கள் - அமைச்சர் சக்கரபாணி, உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தனர்...!
கண் கருவிழி மூலமாக நியாய விலை கடைகளில் பொருட்களை வாங்கும் திட்டத்தை அமைச்சர் சக்கரபாணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சென்னையில் தொடங்கி வைத்தனர்.
கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருள் விநியோகம்
சென்னை திருவல்லிக்கேணி நகரில் உள்ள நடுக்குப்பம், நியாய விலைக் கடையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் பொது விநியோகத் திட்ட அங்காடிகளில் கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருள் விநியோகம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனை உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அ. சக்கரபாணி மற்றும் சேப்பாக்கம் , திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
இது குறித்து, அமைச்சர் சக்கரபாணி கூறுகையில் -
இத்திட்டம் பொதுமக்களின் வரவேற்பிற்கு ஏற்ப, தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும். திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று 18 மாதங்களில் 13 லட்சத்து 42 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 2.23 கோடி ரேஷன் அட்டைகள் பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். உளுந்தம் பருப்பு, சர்க்கரை கூடுதலாக தரப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 2400 நியாய விலை கடைகள் ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெற்றுள்ளது என்றார்.
