சென்னை மழை நீரில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு
சென்னை பெய்த கனமழை காரணமாக மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் மழையின் அளவு அதிகரிக்கும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து, தமிழகத்தின் பல மாவட்டங்களில் காலை முதலே மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று நகரின் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளிலும் தெருக்களிலும் மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், கனமழை காரணமாக மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். புளியந்தோப்பில் வடமாநில பெண் ஒருவரும், மயிலாப்பூரில் வீட்டுக்கு வெளியே வந்த சிறுவனும், ஒட்டேரியில் தமிழரசி என்கிற மூதாட்டி ஒருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்ப்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.