‘நெருங்கும் கனமழை பார்ட் 2’- 8 மாவட்டங்களை புரட்டிப்போடப்போகும் கனமழை - சூறாவளி காற்று 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்

tamilnadu-rain
By Nandhini Nov 17, 2021 08:29 AM GMT
Report

தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு திசையில் நகர்ந்து நாளை (18ம் தேதி) தெற்கு ஆந்திர தமிழக கடற்கரை நோக்கி நகர உள்ளது.

இதனால், இன்று திருவள்ளூர் ,சென்னை, காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ,கடலூர் ,விழுப்புரம், ராமநாதபுரம் ,தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், கள்ளக்குறிச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, சேலம், டெல்டா, மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -

நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்யும். இதனால் தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர் ,வேலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேலம், தர்மபுரி ,கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும். அத்துடன் சேலம், தர்மபுரி ,ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

வருகிற 20-ஆம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை ,வேலூர் ,கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். 21ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்ய கூடும். இன்று மற்றும் நாளை மத்திய மேற்கு தென்மேற்கு வங்கக்கடல் ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை மறுநாள் தென்மேற்கு வங்கக்கடல் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் , இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

‘நெருங்கும் கனமழை பார்ட் 2’- 8 மாவட்டங்களை புரட்டிப்போடப்போகும் கனமழை - சூறாவளி காற்று 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் | Tamilnadu Rain