இன்று சென்னையில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை - நாளை ரெட் அலார்ட்
இன்று சென்னையில் கனமழை பெய்ய உள்ளதால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -
தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
இதனால், 18ம் தேதி தெற்கு ஆந்திர வட தமிழக கடற்கரை நோக்கி நகரும். இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதேபோல் ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதிகனமழையும் பெய்ய கூடும். செங்கல்பட்டு , திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், டெல்டா மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.