பெற்றோர்கள் முன்னிலையில் சிவசங்கர் பாபா கட்டிப்பிடிப்பார்- ஆனா அது Good Touchதான் - ஆசிரியை விளக்கம்
பள்ளி சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, சிவசங்கர் பாபாவை தமிழ்நாடு போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து, பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிவசங்கர் பாபாவிற்கு ஆதரவாக சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் சுஷில்ஹரி பள்ளி நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். செய்தியாளர்களிடம் பள்ளி ஆசிரியை காயத்திரி, கூறியதாவது - சிவசங்கர் பாபா தப்பி சென்றதாகவும், போலீசார் விரட்டி பிடித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துக்கொண்டிருக்கிறது.
ஆனால், சிவசங்கர் பாபா டேராடூனில் இருப்பது அனைவருக்குமே தெரியும். இந்த பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் உண்மை வெளிவரும். முதலில் சிவசங்கர் பாபா தொடர்பான பரவி வரும் வதந்திகள் நிறுத்தப்படவேண்டும். பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக எங்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு நாங்கள் விளக்கங்கள் கொடுத்துள்ளோம். பாபா இருக்கும் இடத்தை சொன்னதே நாங்கள்தான். அவர் ஓடி ஒளியவில்லை. பாபா தப்பி ஓடியதாக கூறப்படும் தகவல் முற்றிலும் தவறானது. சிவசங்கர் பாபாவால் 2001-ஆம் ஆண்டு நல்ல நோக்கத்திற்காக சுஷில்ஹரி பள்ளியை தொடங்கினார்.
இப்பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பான பள்ளி. பள்ளிக்குள் பெற்றோர்கள் வருவது வழக்கமான ஒன்று தான். குழந்தைககளை பாபா தொடுவார். ஆனால் அது நல்ல தொடுதல்தான். பாபா குழந்தைகளை தொடுவார், கட்டிப்பிடிப்பார், ஆனால் அது பெற்றோர்கள் முன்னிலையில்தான் இது நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.