ஆவின் நிறுவனத்தில் யாராவது டீ விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை : அமைச்சர் நாசர் எச்சரிக்கை
தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலையில் இருக்கும் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் பால் உற்பத்தி மற்றும் விற்பனை பணிகள் குறித்து ஆய்வுகளை நேரில் மேற்கொண்டார்.
அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது -
ஆவின் விற்பனை முகவர்கள் பால் தவிர வேற எந்த பொருளும் விற்பனை செய்யக்கூடாது. ஆவின் பால் விற்பனை நிலையத்திலும் ஆவின் பொருட்கள் தவிர வேறு எதையும் விற்க கூடாது. அப்படி யாராவது தவறு செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் நிலையத்தில் டீ விற்பனை செய்யக் கூடாது. மீறி விற்பனை செய்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆவின் நிறுவனத்தில் சுமார் 152 பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. பொருட்களை வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு அனுப்ப நடவடிக்கைள் எடுத்து வருகிறோம். கிழக்காசிய நாடுகள், மேற்கத்திய நாடுகளுக்கும் அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.
ஏற்கனவே அந்த நாடுகளுக்கு சென்றாலும் கடந்த ஆட்சியில் அது தடைப்பட்டது. அதை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பால் விலை குறைக்கப்பட்டதால் தற்போது இழப்பு ஏற்பட்டுள்ளது. உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் சரி கட்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்
இவ்வாறு அவர் கூறினார்.