‘சோதனைக்கு நானும் தயார்... ’ - லஞ்ச ஒழிப்பு துறைக்கு சவால் விட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு நானும் தயாராக இருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் லஞ்ச ஒழிப்புத்துறை எனது வீட்டுக்கு வந்து சோதனை செய்து கொள்ளலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.
அதிமுக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய வீடு உள்ளிட்ட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினார்கள்.
இந்நிலையில், கே.பி.அன்பழகன் மற்றும் அவரது மனைவி மல்லிகா,மகன்கள் சசிமோகன், சந்திரமோகன்,மருமகள் வைஷ்ணவி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக கூறி, அவர்கள் 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது -
கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் ரெய்டு மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியாகும். அதிமுகவை அழித்து நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதே திமுகவின் நோக்கமாக செயல்பட்டு வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால், மக்கள் மத்தியில் திமுக அவதூறுகளை பரப்பி வருகிறது. சட்டமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த மு.க.ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா? தேர்தலை நடத்தினால் ஒரு தொகுதியில் கூட திமுக ஜெயிக்க முடியாது.
தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை, திமுக நிறைவேற்றாமல் மக்களை திசைதிருப்ப நினைக்கிறது. லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு நானும் தயாராக இருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் லஞ்ச ஒழிப்புத்துறை என் வீட்டை வந்து சோதனை நடத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.