‘தலைவர்களை யாரும் புழந்து பேச வேண்டாம்’ : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
தமிழக சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடந்தது.
அவையின் தொடக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கை தமிழர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். அதில், இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும் என்றும், முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும் என்றும், இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரூ.108 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவையில் அறிவித்தார். மேலும், இலங்கை தமிழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை உயர்த்தப்படும் என்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இங்குள்ள தமிழர்கள் மட்டுமல்ல, கடல் கடந்து வாழும் தமிழர்களை காக்கும் அரசாக இருக்கும் திமுக அரசு இருக்கும் என்றும் அவர் உறுதி அளித்து பேசினார்.
இதனையடுத்து, சட்டப்பேரவையில் தலைவர்களை புகழ்ந்து பேச வேண்டாம் என்று அவையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அதாவது, சட்டமுன்வடிவு, கேள்வி நேரத்தில் தலைவர்களை புழந்து பேச வேண்டாம். நேரத்தின் அருமை கருதி அமைச்சர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் இந்த கட்டளையை பிறப்பித்திருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.