அதிமுக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு!
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர் விஜயபாஸ்கர். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து, கடந்த 2 தினங்களுக்கு முன்பு அவரது வீடு உள்ளிட்ட 26 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் காட்டப்படாத 25 லட்சம் ரூபாயும், சில ஆவணங்களும் அதிகாரிகள் கைப்பற்றினர். இதனால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிமுகவை பழிவாங்குவதற்காக திமுக அரசு வருமான வரித்துறையினரை ஈடுபடுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கு அமைச்சர்கள் ரகுபதி மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் மறுப்பு தெரிவித்து பேசுகையில், ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் அளித்த புகாரின் அடிப்படையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டிருப்பதாக அவர்கள் அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.
இது குறித்து எம்.ஆர் விஜயபாஸ்கர் பேசுகையில், தனது வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்திற்கு கணக்கு உள்ளது. சட்ட ரீதியாக இதனை எதிர்கொள்வோம் என்றார்.
இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக 55% சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துகுவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளது.
2016ம் ஆண்டு ரூ.2.5 கோடியாக இருந்த அவரது சொத்துக்கள் 2021ம் ஆண்டு தேர்தலில் ரூ.8.62 கோடியாக அதிகரித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்த போது அவர் அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்துள்ளது. இதனால் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரி சேகர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்து குவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளது.
