ஓபிஎஸ் திடீரென அவசர, அவசரமாக டெல்லி பயணம் – என்ன நடந்தது?
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை எதிர்க்கட்சித் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் திடீரென அவசரமாக டெல்லிக்கு பயணம் செல்கிறார். இன்று காலை 10.30 மணிக்கு அவர் விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி செல்கிறார்.
முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென்று அவர் டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் அவர் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை ஓ.பி.எஸ். சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவில் தற்போது ஏற்பட்டு வரும் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் ஏற்பட்டு வந்துக்கொண்டிருக்கிறது. ஒரு பக்கம், அதிமுக நிர்வாகிகள் பலர் திமுகவுக்கு தாவி வருகின்றனர். இன்னொரு பக்கம் அமமுகவை கலைத்துவிட்டு, சசிகலா அதிமுகவுடன் இணைய உள்ளதாக செய்திகள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், ஓ. பன்னீர்செல்வம் அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் தன் மகன் ரவீந்திரநாத் எம்பிக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று ஓ. பன்னீர்செல்வம் மிகுந்த நம்பிக்கை வைத்து வந்ததாக தகவல் வெளியாயின. அதிமுகவின் தோல்விக்கு பாஜக தான் காரணம் என்றும், பாஜகவின் தோல்விக்கு அதிமுக தான் காரணம் என்றும் இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம் சாட்டி வந்தனர்.
இதனால், அதிமுக – பாஜக கூட்டணி உடைகிறதா? என்ற கேள்வி எழுந்தபோது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று விளக்கம் அளித்தனர்.
இந்த சூழ்நிலையில், ஓபிஎஸ் திடீரென்று டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? ஏன் இந்த அவசர பயணம் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
