குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் கட்டாயம் வழங்கப்படும் – அமைச்சர் எ.வ.வேலு
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதி அமைச்சர் பிடிஆர் நாகராஜன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது -
நில எடுப்பு பணிகள் காரணமாக நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது.
நில எடுப்பு பணியை விரிவுபடுத்துவதற்காக 5 மாவட்ட வருவாய் அலுவலர்களை நியமனம் செய்ய முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். அந்த உத்தரவின்படி நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலையோரங்களில் மரங்கள் நடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
பழனி- கொடைக்கானல் சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கொடைக்கானல்-மூணாறு இடையே சாலை அமைக்கவும் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஐந்தாண்டு காலம் ஆட்சி புரிய எங்களை தேர்ந்தெடுத்து மக்கள் வாக்களித்துள்ளனர். தேர்தல் வாக்குறுதியில் சொல்லாததையும் நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். அப்படி இருக்கும் போது கட்டாயம் குடும்பப் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாயும் வழங்கப்படும். இந்தத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.