திடீரென மத்திய அமைச்சரை சந்தித்தார் எடியூரப்பா! தமிழக அரசுக்கு எதிராக காய் நகர்த்துகிறாரா? இரு அரசுக்கு இடையே மோதல் வெடிக்குமா?
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. அணை கட்டிவிட்டால் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காது என்பதால் இந்த திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாது அணையால் தமிழகத்துக்கு எந்த பிரச்னையும் இருக்காது என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
அதனால், அணைக்கட்ட தமிழக அரசு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.
இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மறுப்பு தெரிவித்து விட்டார். இதனையடுத்து, மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்தார் தமிழக அமைச்சர் துரைமுருகன். அப்போது, மேகதாது அணை விவகாரம் பற்றி மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் பேசினார்.
அப்போது, மேகதாது அணைக் கட்ட தமிழக அரசை கேட்காமல் எந்த ஒரு அனுமதியையும் வழங்க மாட்டோம் என்று மத்திய அமைச்சர் துரைமுருகனிடம் உறுதி அளித்துள்ளார். இதனால், கர்நாடக அரசு தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கி இருக்கிறது.
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர், அணை கட்ட உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்றும் தமிழகம் தேவையில்லாமல் வழக்கு தொடர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
இதனால், மேகதாது அணை கட்டுவதில் தமிழக அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா திடீரென மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்துள்ளார்.
மேகதாது அணை விவகாரம் பற்றி அவருடன் பேசி வருவதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. எடியூரப்பாவின் இந்த திடீர் சந்திப்பு தமிழக அரசுக்கு எதிராக காய் நகர்த்தும் செயலாகவே தற்போது பார்க்கப்பட்டு வருகிறது.