ஒன்றிய அரசா? மத்திய அரசா? இதில் எது சரியானது? என்னதான் நடக்கிறது?
முதல்வர் மு.க.ஸ்டாலினும், அவரது அமைச்சர்களும் ‘மத்திய அரசு’ என்று சொல்வதற்கு பதில் ‘ஒன்றிய அரசு’என்று சொல்லிக்கொண்டு வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த மே 28ம் தேதி ஜி.எஸ்.டி. கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்தக் கூட்டத்தில், தமிழக நிதியமைச்சர் டிடிஆர் தியாகராஜன் பேசியதாவது -
கூட்டாட்சித் தத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசிய உரையில் பெரும்பான்மையான பகுதியில் திமுக ஒன்றிய அரசு உடன் மோதும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக வந்த கருத்துகளை மறுத்திருந்தார். நமது உரிமைகள் மற்றும் கொள்கைகள் மீறப்படும் நிகழ்வுகளைத் தவிர ஒன்றிய அரசுடன் இணைந்து முடிந்த அளவிற்கு இணக்கமாக பணியாற்றுவதே எனது எண்ணம். அரசியலமைப்பின்படி இதுவே நம் கடமை.
திமுக ஆட்சி அமைத்த நாள் முதல் எல்லா அதிகாரப்பூர்வமான அறிக்கைகளில், இந்திய அரசை குறிப்பிடுகையில் மத்திய அரசு என்பதற்கு பதிலாக ‘ஒன்றிய அரசு’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்? இந்த வார்த்தையை முதன்முதலாக 2021 தேர்தல் வெற்றிக்குப் பிறகு மே 2ம் தேதி அன்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் பயன்படுத்தியது பத்து ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம் கண்டிருக்கும் மாநிலத்தில் பல கட்சிகளிடையே இது விவாதமாக மாறியுள்ளது.

முதலமைச்சர் தொடங்கி அவர் அமைச்சரவை மற்றும் ஊடகங்களில் ஒன்றிய அரசு எனும் சொல் மிக இயல்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை விரும்பாத பாஜக இதனை ஒரு தீங்கிழைக்கும் செயலாக பார்த்து வருகிறது. மாநில பாஜக தலைவர்கள் ‘ஒன்றிய அரசு’ எனும் சொல்லை பயன்படுத்தி, தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.
மேலும், திமுகவின் இந்த அணுகுமுறை மோதலுக்கு உரியவை என்று சொல்லிக் கொண்டு வருகிறார்கள். அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் இந்த சொல் இடம் பெற்றிருக்கிறது. அதனால்தான் நாங்கள் இதை பயன்படுத்துகிறோம். இந்திய அரசே அனைத்து ஆவணங்களிலும் ‘ஒன்றியம்’ என்ற சொல்லையே பயன்படுத்துகிறது. அவர்களே பயன்படுத்தும் சொல்லால் அவர்கள் எப்படி வருத்தம் அடைவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இது குறித்து, தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் கே. டி. ராகவன் கூறியதாவது -
கடந்த மே 2ம் தேதிக்கு முன் ஏன் திமுக இந்த சொல்லைப் பயன்படுத்தவில்லை. இந்த சொல்லை வேண்டுமென்றே திமுக பயன்படுத்திக் கொண்டு வருகிறது. இதற்கு முன் ஏன் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிடவில்லை. தேர்தலுக்குப்பின் தடம் மாறுகிறார்கள். இதில், ஒரு சூழ்ச்சி நிறைந்த நோக்கம் உள்ளதாக தெரிகிறது என்றார்.
முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், மத்திய அரசு என்ற பயன்பாடு சரியானது என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் பேசுகையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எப்படி மத்திய அரசு என்பதே சரியான சொற்கள் என்று சொல்கிறார் என்று எனக்கு புரியவில்லை. அப்படி என்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் தவறா? அல்லது தக்க எதிர்தரப்பு வாதிகள் இல்லாமல் கடந்த 70 ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் வழக்குகளை ஏற்றுக் கொண்டு வருகிறதா? நீதிமன்ற ஆவணங்கள் அரசை மத்திய அரசு என்று இல்லாமல் ஒன்றிய அரசு என்றுதான் சுட்டிக்காட்டியுள்ளனர் என்றார்.